திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.77 திருமாணிகுழி - திருவிராகம் பண் - சாதாரி |
பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.
|
1 |
சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி பேசும்அர னார்மகிழ்விடந்
தாதுமலி தாமரைம ணங்கமழ வண்டுமரல் தண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூபலகில் நீடுதவி மாணிகுழியே.
|
2 |
அம்பனைய கண்ணுமை மடந்தையவள் அஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தஅர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடியழகார்
உம்பரவர் கோன்நகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.
|
3 |
நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ்
சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாங்
கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடலதுகண்
டொத்தவரி வண்டுகளு லாவியிசை பாடுதவி மாணிகுழியே.
|
4 |
மாசில்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொல்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையின் மன்னியழகார்
ஊசல்மிசை யேறியினி தாகஇசை பாடுதவி மாணிகுழியே.
|
5 |
மந்தமலர் கொண்டுவழி பாடுசெயும் மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாஞ்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.
|
6 |
எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்யஇறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சதனை உண்டுலகம் உண்ணஅருள் உத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை மைம்பொழிலின்வாய்
ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம் நாறுதவி மாணிகுழியே.
|
7 |
எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரும் மென்மொழியி னார்பணைமு லைப்பவள வாயழகதார்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.
|
8 |
நேடும்அய னோடுதிரு மாலும்உண ராவகை நிமிர்ந்துமடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தமித ழிச்சடையெம் ஈசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவின்
ஊடுலவு புன்னைவிரி தாதுமலி சேருதவி மாணிகுழியே.
|
9 |
மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி யில்லிகள் முயன்றனபடும்
முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி பூகம்நிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.
|
10 |
உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியஎம் மானையடி சேருமணி காழிநகரான்
சந்தம்நிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கள்நெடு வானநிலனே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |